ஈழத்தின் வரலாற்று புகழ் பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தேர் திருவிழா இன்று காலை பக்தர்களின் விண்ணைமுட்டும் அரோகரா கோக்ஷம் முழங்க தேர் ஏறிவந்த நல்லையம்பதி முருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்திருந்தார்.
நல்லூர் பெரும் திருவிழாவின் 24 ஆம் நாளான இன்று வியாழக்கிழமை தேர் திருவிழாவில் சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய திருத்தேரில் வலம் வந்து காட்சி தரும் வேலனை காணபெருந்திரளான பக்தர்கள் திரண்டுள்ளனர்.
காலை 6 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து ஆறுமுக பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் காலை 7 மணிக்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அலங்கார கந்தனாம் நல்லூரானின் தேர் திருவிழாவை காண உள்நாட்டவர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட பலரும் நல்லூரை நோக்கி படையெடுத்துள்ளனர்.
அத்துடன் பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களையும் நிறைவேற்றி வருவதுடன், அதேவேளை ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூறுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும் நல்லூர் கந்த பெருமானை பக்தி மயத்துடன் வழிபட்டிருந்தனர்.